குடும்பத்தலைவி வரையறை

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

பொருளாதாரத் தகுதிகள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்

ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை

விண்ணப்பிக்கும் நடைமுறைகள்

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாய விலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்

‘ஆணுக்கிங்கே பெண் நிகர்’ என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.

ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.

ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.

சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.

விதிவிலக்குகள்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

செயல்படுத்தும் துறைகள்

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிர்வாகத் துறை சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை ஆகும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறைத் தலைவராகச் செயல்படுவார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமைத் தலைமைச் செயல் அலுவலர், மாநில அளவில் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மென்பொருள் உருவாக்குதல், திட்டத் தரவுகளைச் சரிபார்த்தல் ஆகிய பணிகளைச் செய்வார். சிறப்புப் பணி அலுவலர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின், ஒட்டுமொத்தத் திட்டப் பணிகளை ஒருங்கிணைப்பார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் ஒருங்கிணைப்புத் துறைகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகியவை செயல்படும்.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்டப் பயனாளிகளைக் கண்டறிதல், முகாம்கள் ஏற்பாடு செய்தல், விண்ணப்பங்கள் பதிவுச் செய்தல், பயனாளிகள் செய்யும் மேல்முறையீட்டைத் தீர்வு செய்தல் ஆகிய பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள், வட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்டு செய்ய வேண்டும். இப்பணிகளைச் சென்னைப் பெருநகர மாநகராட்சிப் பகுதியில், சென்னைப் பெருநகர மாநகராட்சி ஆணையாளர் செயல்படுத்துவார்.

மாநிலக் கண்காணிப்புக் குழு

தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இத்திட்டத்தை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநிலக் கண்காணிப்புக் குழு செயல்படும்.

இக்குழுவில், வளர்ச்சி ஆணையர், நிதித்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

இக்குழு திட்டச் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, செயல்படுத்தும் அரசுத் துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கும்.